பாவலர் இறையரசனாரின் திருவுருவப் படத்தை , சிங்கப்பூரின் மேனாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் திறந்து வைத்தார்.
[ கீழ்க்கண்ட செய்தி 15-அக்டோபர்-2022 அன்று தமிழ் முரசு நாளிதழில் வெளியானது. நன்றி: தமிழ்முரசு ]
கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் முன்னாள் தலைவர் கவிஞர் இறை.மதியழகனின் தந்தையாரும் குறளும் பொருளும், நாலும் பொருளும், சிலம்பும் பொருளும்-ஆகியன உள்ளிட்ட 14 நூல்களை இயற்றியவரும் பாட்டுரைப் பாவலர் என அழைக்கப்படுபவருமான இறையரசன் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழகத்தில் காலமானார்.
அவரது நினைவைப் போற்றும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) சிங்கப்பூரில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த பவன் உணவக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கவிமாலை அமைப்பும், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தன.
கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ அன்பழகன், முனைவர் இரத்தின வேங்கடேசன், பேராசிரியர் சுப.திண்ணப்பன் போன்றோர் இறையரசனின் பெருமைகளைப் போற்றினர். இறையரசனின் திருவுருவப் படத்தை முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் திறந்து வைத்து உரையாற்றினார்.
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, நா.ஆண்டியப்பன், மு.ஹரிகிருஷ்ணன், அருமைச் சந்திரன், தனபால் குமார் போன்றோரும் இறையரசனார் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி புகழுரை வழங்கினர்.
இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய இறை.மதியழகன், தமது தந்தைக்கும் சிங்கப்பூர் கவிஞர்களுக்கும் இடையிலான தொடர்புகளை நினைவுகூர்ந்தார். தமது தந்தையின் தமிழ் வாழ்த்துக் கவிதை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.



